Zool Ad Network

Monday, April 15, 2013

எறும்பும், வெட்டுக்கிளியும்

 மக்களே...!!!

நான் சமீபத்துல FACEBOOK- ல படிச்ச கதை. நமக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கறதால இங்க பகிரலாம்னு. படிச்சி பாருங்க. எறும்பும், வெட்டுக்கிளியும் கதை நமக்கு நல்லா தெரிஞ்சது தான். அதை இப்போதைய இந்தியாவுக்கு பொருத்தமா யாரோ ஒரு மாத்தி எழுதி இருக்கார். 



உண்மை கதை: 

எறும்பு கோடைகாலத்துல கடினமா உழைச்சி, தன்னோட வீட்டை வலிமையா கட்டி வெச்சி, குளிர்காலத்துக்கு தேவையான உணவையும் சேமிச்சி வெச்சிக்கும். ஆனா, இதை பார்க்கிற வெட்டுக்கிளி எறும்பு தேவையில்லாம என்னென்னவோ பண்ற மாதிரி கிண்டல் பண்ணும். கோடைகாலம் முழுக்க, ஆடி பாடி தேவையில்லாம வீணா பொழுது போக்கிட்டு  மழைக்காலத்துல குளிர்ல கஷ்டப்பட்டு உணவு இல்லாம பட்டினியா கிடந்து செத்து போகும்.

ஆனா, தன்னோட நேரத்தை சரியா பயன்படுத்திகிட்ட எறும்பு அந்த மழை மற்றும் குளிர் காலத்துல தன்னோட சேமிப்பை பயன்படுத்தி நிம்மதியா வாழும். இதேக்கதைய இதனோட INDIAN VERSION அப்படின்னு ஒருத்தர் எழுதியிருக்கார். இதுலயும் ஒரு உண்மை இருப்பதை மறுப்பதற்கு இல்லை. 

எறும்பு தன்னுடைய கோடை காலத்தை சரியா பயன்படுத்தி உணவு சேமிச்சி, வீட்டை எல்லாம் சரிபார்த்து குளிர் காலத்துக்கு தயாராகும். இதை பார்க்கிற வெட்டுக்கிளி எறும்பை ஏளனம் செய்து வீணா பொழுதை கழிக்கும். 

 குளிர் காலம் வந்ததும், எறும்பு சந்தோசமா இருக்கறதை தாங்க முடியாத வெட்டுக்கிளி பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, நாட்ல எல்லாரும் குளிர்லயும், மழையிலயும் கஷ்டப்படும் போது எறும்பு மட்டும் எப்படி சந்தோசமா இருக்கலாம்னு கேள்வி கேட்கும். அதை நாடும் மக்களும் எப்படி அனுமதிக்கலாம்னு தூண்டி விடும். டிவி சேனல்கள் எல்லாம் போட்டி போட்டுகிட்டு குளிர்ல நடுங்கற வெட்டுக்கிளி, சந்தோமா இருக்கிற எறும்பு படத்தை அடுத்தடுத்து வெச்சி படங்களையும், வீடியோ கிளிப்பிங்க்சும் காட்டி மக்களை இன்னும் உசுப்பேத்தும்.  அவ்ளோதான் நாட்டுக்குள்ள பத்திக்கும். இந்த ரெண்டு பேரோட நிலைமைக்கு இடையில இருக்கிற வித்தியாசத்தை பார்த்து உலகமே ஸ்தம்பிச்சி நிக்கும். உடவே எப்படி இந்த பாவப்பட்ட வெட்டுக்கிளியை இப்படி கஷ்டப்பட அனுமதிக்கலாம்னு எல்லா பக்கம் இருந்தும் கேள்விகள் பறக்கும்.
 
 சமூக நல ஆர்வலர்கள் எல்லாம் எறும்போட வீட்டு முன்னால ஆர்பாட்டம் பண்ணி வீட்டை முற்றுகை இடுவாங்க. இன்னும் சிலபேர் குளிர் காலத்துல மட்டுமாவது வெட்டுக்கிளிக்கு நல்ல சாப்பாடும், நல்ல வீடும் குடுக்க சொல்லி உண்ணாவிரதம் இருப்பாங்க. வெட்டுக்கிளி தாழ்த்தப்பட்ட இனம் அப்படிங்கறதால தான் அதுக்கு இப்படி ஒரு நிலைமை அப்படின்னெல்லாம் அறிக்கை பறக்கும். 

ஐநா சபையோட மனித உரிமைகள் ஆணையத்துல இருந்து வெட்டுக்கிளிக்கான உரிமைகளை சரியா செயல்படுத்தலன்னு சொல்லி கவர்மெண்டுக்கு கண்டனம் தெரிவிப்பாங்க. இணையத்துல, வலைப்பூக்கள், FACEBOOK எல்லாம் இந்த செய்தி தான் தீப்பிடிச்சி எரியும். வெட்டுக்கிளிக்கு சப்போர்ட் பண்ண சொல்லி குழு எல்லாம் ஆரம்பிப்பாங்க. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்வாங்க. நாடு தழுவிய போராட்டம், விசாரணை கமிஷன் எல்லாம் வெப்பாங்க. எறும்போட சொத்துகளை முடக்கி, வெட்டுக்கிளி, எறும்பு இரண்டு பேரையும் ஏழையாக்கி சமநிலைக்கு கொண்டு வரணும்னு சட்டம் போடுவாங்க. 

அங்கங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கிற வெட்டுக்கிளிகள் தன்னோட சொந்த இடத்துக்கு திரும்ப இலவச ரயில் விடுவாங்க. அதுக்கு வெட்டுக்கிளி ரதம் அப்படின்னு பேரு வெப்பாங்க. வெட்டுக்கிளிகள் மீதான தீவிரவாத செயல் தடுப்பு சட்டம் அப்படின்னு ஒன்னை போட சொல்லி கமிஷன் அறிக்கை குடுக்கும். மத்திய அரசும் அந்த சட்டத்தை போடும். கல்வி நிலையம், வேலை வாய்ப்பு எல்லாத்துலயும் வெட்டுக்கிளிகளுக்கு தனி ஒதுக்கீட்டு திட்டம் வரும். 

அளவுக்கு அதிகமா சேமிச்சதா சொல்லியும், வெட்டுக்கிளிக்கு அநீதி இழச்சதாவும் சொல்லி  எறும்புக்கு அபராதம், புது சட்டப்படி நெறைய வரி எல்லாம் போட்டு எறும்புக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் புடுங்கிப்பாங்க. எறும்போட வீட்டை பிரிச்சி சின்ன, சின்னதா அறைகள் கட்டி வெட்டுக்கிளிகளுக்கு இலவசமா குடுப்பாங்க. அது எல்லா டிவியிலயும் வரும். உலகமே நீதி பிழைத்தது அப்படின்னு சொல்லி அறிக்கை வாசிப்பாங்க. 

வெட்டுக்கிளி போராடி ஜெயிச்சதை பாராட்டி ஐநா சபையில பேச கூப்பிடுவாங்க. சில வருசங்கள் கழிச்சி, எறும்பு அமெரிக்காவுக்கு போயிருக்கும். அங்க ஒரு நல்ல பிசினஸ் ஆரம்பிச்சி, உழைச்சி மல்டி மில்லியனரா செட்டில் ஆயிருக்கும். இங்க வெட்டுக்கிளி இருக்கறதை எல்லாம் உக்காந்து தின்னே தீர்த்துட்டு, அடுத்த குளிர் காலத்துலயும் நடுங்கி செத்துட்டு தான் இருக்கும். 

மொத்ததுல நம்ம நாட்டுல வெட்டுக்கிளிக்கும் சேர்த்து கடுமையா உழைச்ச எறும்பு அமெரிக்காவுல போய் செட்டில் ஆனதுதான் மிச்சம் ஆகும்.

படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க. 

N.B.: I have no idea whose creative mind this has come out from, but this piece is awesome

Thursday, April 4, 2013

கடவுளின் கையானவர்

மக்களே...!!!

வாழ்க்கை இருக்கே, அது ஒரு கடைசி பக்கத்தை கிழிச்சிட்ட துப்பறியும் நாவல் மாதிரி. அடுத்த நொடியில என்ன நடக்கும்ன்னு அந்த நொடி வர வரைக்கும் தெரியாது. அதே மாதிரி தான், நமக்கு வாய்க்கிற விசயங்களும். சில விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ சில பேருக்கு மட்டும் தான் சில அற்புதங்கள் பார்க்கவோ, கேக்கவோ அல்லது செய்யவோ வாய்க்கும். அதையெல்லாம் கேக்கும் போதே இப்படி கூட இருக்குமான்னு தான் நமக்கு தோணும். 


ஆஸ்திரேலியாவுல இருக்கிற ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 13 வயசுல நுரையீரல்ல இருக்கிற இரத்தகுழாய்ல இரத்தம் கட்டியாகி அடைச்சிக்கிட்டதால, நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதா போயிடுச்சி. அதுக்கு அவருக்கு 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டு, இரத்தம் கொடுக்கற பலப்பேரோட உதவியால எல்லாம் நல்லப்படியா முடிஞ்சது. நாமளா இருந்திருந்தா அதை அப்படியே மறந்திருப்போம். (தான் உடல் நலம் இல்லாதப்போ, பல இரத்தம் குடுக்கறவங்க உதவியால குணமாகி வரவங்கள்ள, எத்தனை பேரு மத்தவங்களுக்கு இரத்தம் குடுக்க முன் வராங்க நம்ம ஊர்ல ? ) வந்த அவருக்கு பலர் இரத்தம் குடுத்துதான் தான் பொழைச்சோம் அப்படிங்கற அந்த விஷயம் மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சி. 18 வயசு ஆனவங்க மட்டும் தான் இரத்தம் குடுக்க முடியும் அப்படிங்கறதால 18 வயசு ஆகிற வரைக்கும் காத்திருந்து, தன்னையும் ஒரு இரத்தம் கொடுக்கிறவரா பதிவு பண்ணிக்கிட்டார்.

அதுக்கு அப்புறமா, இரத்தம் குடுத்து சிலருக்கு உதவியும் பண்ணினார். ஆனா கடவுள் அவருக்குள்ள அவர் இரத்தத்துல ஒளிச்சி வெச்ச அற்புதம் அப்போ அவருக்கு தெரியல. அப்புறமா தான் டாக்டருங்க அதை கண்டுபுடுச்சாங்க. அது ஆன்டி -D - ANTI - D  அப்படிங்கற ஒரு புரோட்டீன். இது இலட்சதுல ஒருத்தருக்கு தான் இரத்தத்துல இருக்கும். அம்மாவோட இரத்த வகை நெகடிவ் வகையாவும் (A - நெகடிவ், B - நெகடிவ் அப்படின்னு எல்லாம் சொல்வாங்களே அந்த நெகடிவ்), கர்ப்பப்பையில இருக்கிற குழந்தையோட இரத்தம் பாசிடிவ் வகையாவும் இருந்தா (அதே மாதிரி தான் பாசிடிவும்), குழந்தை பிறக்கும் போது ரெண்டு பேரோட இரத்தமும் கலந்து அம்மாவோட இரத்தமே அதாவது அம்மாவோட நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தையோட இரத்த புரோட்டீன்களை நோய் கிருமிகளா நெனச்சி (வேற இரத்த வகையா இருக்கிறதால), இரத்தத்தை கட்டி கட்டியா உறைய வெச்சி, குழந்தையை கொன்னுடும். இதை Rhesus disease அப்படின்னு சொல்வாங்க. இது கொடுமையான வியாதின்னு எல்லாம் சொல்ல முடியாது - இரத்தம் கொடுக்கும் போது ஒருத்தருக்கு தவறுதலான குரூப் இரத்தம் கொடுக்கிற மாதிரியான ஒரு நிகழ்வு. கல்யாணம் பண்ணிக்கிற ஆணும் பெண்ணும் தன்னோட இரத்த வகைகள் ரெண்டு பேருக்குமே பாசிடிவ் அல்லது நெகடிவ் அப்படின்னு இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டா இதை தடுக்க முடியும். அதுக்காக மாத்தி கல்யாணம் பண்ணிக்கிற எல்லாருக்கும் இந்த பிரச்சனை வரும்ன்னு கட்டாயம் எதுவும் இல்லை. குழந்தையோட இரத்த வகை எப்படி இருக்கு அப்படிங்கறதை பொறுத்து தான் இந்த பிரச்சனை வரதும், வராததும் இருக்கு.  

ஓகே... விசயத்துக்கு வருவோம், இந்த பிரச்சனை இருக்கிறவங்களுக்கு, இந்த ஆன்டி - D ஒரு மருந்தா செயல்பட்டு அம்மாவோட இரத்தத்துல இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை குறைச்சி, குழந்தையை சாவுல இருந்து காப்பாத்தும். நம்ம கதையோட நாயகர் ஜேம்ஸ் ஹாரிசன் அவரோட இரத்தத்துல இந்த ஆன்டி - D இருந்தது. இதை தெரிஞ்சிக்கிட்ட அவர் செய்த காரியம் என்ன தெரியுமா? தன்னோட 18வது வயசுல இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்போ அவருக்கு வயசு 58 தன்னோட இரத்தத்தை தொடர்ந்து தானமா கொடுத்திட்டு வரார். இது வரைக்கும் இவரால காப்பாத்தபட்டிருக்கிற குழந்தைகளோட எண்ணிக்கை 2 மில்லியன் - அதாவது 20 இலட்சம் குழந்தைகள். இதை படிச்சதும் எனக்கு ஒரு நொடி மூச்சு நின்னே போச்சி. ஒரே ஆள் 20 இலட்சம் குழந்தைகளை காப்பாதியிருக்கார் அப்படின்னா, அவர் நெசமாலும் கடவுள் தானே. 

அதுதான் நான் முதல்ல சொல்ல வந்த விஷயம், கடவுள் சில பேருக்கு மட்டும் தான் இந்த மாதிரி அற்புதங்களை வெப்பார். அது சரி, எல்லாருக்கும் இருந்திட்டா அப்புறம் அதுக்கு பேரு அற்புதம் கிடையாது இல்ல....!!!!