Zool Ad Network

Wednesday, June 26, 2013

நலம் காக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை...

 மக்களே...!!!
இது கதம்பமாலை வலைப்பக்கத்தில் வந்த ஒரு பதிவு. எல்லாருக்கும் உபயோகமா இருக்குமேன்னு இங்க பகிர்ந்துக்கறேன். 

போனவாரம் எனது உறவினர் ஒருவரின் பத்துமாத குழந்தைக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பிரச்சினை. எங்கெங்கோ குப்பன், சுப்பன் டாக்டரிடமெல்லாம் காட்டி மருந்து வாங்கிக்கொடுத்தும் நோய் கொஞ்சம்கூட தீர்ந்தபாடில்லை. அவர் கொஞ்சம் வசதி குறைவானர்தான். மூன்று நாட்கள் ஆகியும் குழந்தைக்கு உடல்நிலை தேறாததால்  எனது ஏரியாவுக்கு அருகிலிருக்கும் ஒரு பிரபல தனியார் கிறித்துவ மருத்துவமனையில் குழந்தையை சேர்க்கலாம் என்று நான் கூறினேன். மருத்துவச்செலவுகளை நான் கவனித்துக்கொள்வதாய் சொல்லியும்கூட அவர் அதை மறுத்து தன்னையும் குழந்தையையும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டிராப் செய்தால் மட்டும் போதும் என்றார். பேருந்தில் அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு கோயம்பேடு சென்று அங்கிருந்து போரூர் செல்வதற்குப்பதில் மாதவரம்-மதுரவாயல் நெடுஞ்சாலை வழியாகச்சென்றால் வெறும் இருபது நிமிட பயணமென்பதால் நானும் அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டு போரூரைச்சென்றடைந்தேன்.

மதுரவாயல் நெடுஞ்சாலையில் போரூர் டோல் கேட்டுக்கு வெகு அருகிலேயே பூந்தமல்லி செல்லும் சாலையின் மீதே அமைந்திருந்தது  SRMC என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்ட்டர். எனக்கு இதுதான் முதல் முறை என்பதால் ஹாஸ்பிட்டலை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனேன். என்னோடு வந்த உறவினரிடம் இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரி வேறு. பணம் நிறைய வாங்கப்போகிறார்கள் என்றேன். அதற்கு அவர் இந்த ஆஸ்பத்திரியில் வசதியானவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்ப்பதாகவும், ஏழைகளுக்கு இலவசப்பிரிவும் இயங்குவதாகவும் கூறியதைக்கேட்டதும் வியப்பாய் இருந்தது. (அப்போதுதான் அவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது அணிந்திருந்த கொஞ்ச நஞ்ச தங்கநகைகளையும் கழற்றி வைத்துவிட்டு கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு அணிந்து வந்ததன் மர்மம் எனக்கு விளங்கியது(!)...)

ஏற்கனவே தனக்கு இரண்டு பிரசவமும் இங்குதான் நடந்தது என்றும், தனது மூத்த மகளின் தொண்டை அறுவை சிகிச்சையும் இங்குதான் நடந்தது என்றும் கூறினார். இலவசப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ஏதாவது முக்கியமான மருந்துகள் என்றால் அதற்கு மட்டும் காசு வாங்குவார்கள் என்றும், மற்றபடி ஆபரேஷன் சார்ஜ், பெட் சார்ஜ், உணவு போன்ற அனைத்துமே ஃப்ரீதான் என்றார்.

அவரை வெறுமனே டிராப் செய்துவிட்டு வர மனது ஒப்பாததால் டாக்டரைப்பார்க்கும் வரை கூடவே இருந்து, டாக்டர் இலவச வார்டுக்கு அட்மிஷன் எழுதிக்கொடுத்ததும், லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அவரை இலவச வார்டில் விட்டுவிட்டுக்கிளம்பலாம் என்று அவருடன் ‘’ G “ Block நோக்கி நடந்தேன்.  அந்த பிளாக்கில் நுழைந்ததும் என்னே ஆச்சர்யம். அங்கு நிலவிய சுத்தமும், கட்டிட அமைப்புகளும் அது இலவசப்பிரிவு என்று எவருமே நம்ப மாட்டாத அளவுக்கு இருந்தது. குழந்தைகள் பிரிவு நாலாவது மாடியில் என்பதால் லிஃப்டில் ஏறி சென்றடைந்தோம். குழந்தைகள் வார்டுக்குள் நுழைந்ததும் எனக்கு எப்பவோ ஒரு முறை எனது இரண்டு வயது மகனுக்கு அப்போல்லோவில் அட்மிட் பண்ணியிருந்த அட்மாஸ்ஃபியருக்கும், ராமச்சந்திராவின் இலவச வார்டு அட்மாஸ்ஃபியருக்கும் பெரிதாய் வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. எனது உறவினரை அவரது குழந்தைக்காக ஒதுக்கப்பட்ட கட்டிலில் அமரவைத்துவிட்டு அவரது உடமைகளையெல்லாம் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். முழுவதும் வெவ்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்ட குழந்தைகளாலும் அவர்களுடைய பெற்றோர்களாலும் நிரம்பியிருந்தது அந்த வார்டு.

பார்வையாளர்கள் நேரம் தவிர மற்ற நேரங்களில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதியாம். நோயாளிக்கும், அவருடன் தங்குபவருக்கும் மூன்று வேளையும் தரமான இலவச உணவு சரியான நேரம் தவறாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடுகிறது. ஏதாவது உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கு மட்டும் நோயாளியின் பொருளாதார நிலைக்கேற்ப பணம் வாங்கப்படுகிறது.

மற்றபடி சிகிச்சை தரம், ஊழியர்களின் சேவை, ஹாஸ்பிட்டலின் சுத்தம், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் என அனைத்தும் பெரிய பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகரானதாகவே இருக்கிறது இங்கு. 

எனது உறவினரின் குழந்தை கிட்டத்தட்ட மூன்றுநாட்கள் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று உடல் நிலை சரியாகி வீடு திரும்பியது. இந்த மூன்று நாட்கள் சிகிச்சைக்கு செலவான தொகை வெறும் நானூற்று சொச்சம் மட்டுமே. அதுகூட சில முக்கிய மருந்துகளுக்கும், சில பரிசோதனைகளுக்கும் மட்டுமே. மற்றபடி பெட்சார்ஜ், உணவு, டாக்டர் ஃபீஸ், etc., etc., அனைத்தும் இலவசம்தான். ராமசாமி உடையாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, யுனிவர்சிட்டியையும் கொண்டிருக்கிறது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலான இந்த ராமச்சந்திரா மெடிக்கல் சென்ட்டர் தனியாருக்குச்சொந்தமானது என்றாலும் இதில் இயங்கும் இலவசப்பிரிவு நிச்சயமாய் மனதாரப்பாரட்டத்தக்கதே என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எனக்கில்லை.

இண்டெர்நெட்டில் இதைப்பற்றிய தகவல்களைத்தேடியபோது பலர் இந்த மருத்துவமனையை சரியில்லை என்று விமர்சித்திருந்ததை பார்த்தேன். அவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எனது பார்வையில் இதன் இலவசப்பிரிவு நிச்சயம் நமது ஏழை மக்களுக்கும், வசதியற்றவர்களுக்கும் மிகப்பெரிய வரம்தான். இதன் இலவசப்பிரிவைப்பற்றி பதிவாக எழுதுவதால் அதைப்படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த ஏழை மக்களுக்கு அதைப்பற்றி கூறுவதன் மூலம் வசதியற்ற மக்களும் தரமான சிகிச்சையை இங்கு பெறும் வாய்ப்பு வாய்க்கும் என்பதால் மட்டுமே இதையும் ஒரு பதிவாய் எழுதினேன்...

வாழ்க ஶ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்ட்டரின் இலவச சேவை... வளர்க தொடர்ந்து தொய்வின்றி இந்த சேவை... GOOD LUCK.

Friday, June 14, 2013

லவ்வன்டே இதேரா...!!!

கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை.

கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப்பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த, அய்யப்பன் என்ற இளைஞருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, சுதா என்ற பெண்ணுடன், கடந்தாண்டு திருமணம் நடந்தது. சுதா, ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், கடந்த வாரம், சுதாவுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.அப்போது, அங்கு, மிக பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த பகுதிக்கு, கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து, எந்த வாகன போக்குவரத்தும் இல்லை. கால்நடையாகவே, நகரங்களுக்கு செல்ல வேண்டும். வேறு வழியில்லாததால், மனைவியையும், அவரது வயிற்றில் உள்ள சிசுவையும் காப்பாற்றுவதற்காக, அய்யப்பன், தைரியமாக ஒரு முடிவை எடுத்தார். மனைவியை தோளில் சுமந்தபடியே, பலத்த மழையையும் பொருட்படுத்தாது, அடர்ந்த வனப் பகுதியில், வேகமாக நடந்தார்.அதிகாலை, 6:00 மணிக்கு, அவரது, நடை பயணம் துவங்கியது. நேரம் செல்லச் செல்ல, மழை அதிகரித்தது. நீண்ட நேரம் சுமந்ததால், தோளில், கடுமையான வலியும் ஏற்பட்டது. ஆனால், மனைவியின் அபய குரலும், சிசுவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பும், அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தின.

இதனால், சிரமத்தை பொருட்படுத்தாமல், தொடர்ந்து நடந்தார். இறுதியாக, 40 கி.மீ., தூரத்தை கடந்த அவர், மாலை, 6:00 மணிக்கு, மலை அடிவாரத்துக்கு வந்தார். அங்கிருந்த ஜீப்பை, வாடகைக்கு அமர்த்தி, தன் மனைவியை, பத்தனம்திட்டா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறினர். இதையடுத்து, உடனடியாக, கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தன் மனைவியை அழைத்து வந்தார். அங்கு, சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினர். சுதாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் போராட்டத்துக்கு பின், சுதாவை காப்பாற்றினர். ஆனாலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தை, இறந்தே பிறந்தது. இதனால், அய்யப்பன், சோகத்தில் ஆழ்ந்தார். இந்த தகவல் வெளியானதும், கோட்டயம், பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள், மனைவியை தோளில் சுமந்தபடி, கடும் மழையில், 40 கி.மீ. நடந்த, அய்யப்பனின் மன உறுதியை பாராட்டினார். அவரது குடும்பத்துக்கு, நிதி உதவியும், குவியத் துவங்கியுள்ளது. 

நடந்த சோகமும் இழப்பும் அவருக்கு ஈடு செய்ய முடியாதது அப்படின்னாலும், அவர் அவரது மனைவி மேலும், அவர் குழந்தை மேலும் வெச்சிருந்த காதல்...!!! எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை.

- நன்றி தினமலர்.





Friday, June 7, 2013

நீ இன்னும் வளரனும் தம்பி

இதுவும் எனக்கு FACEBOOK - ல வந்த ஒரு செய்தி தான். சில சமயம் நாம மத்த மிருக இனங்களையும் விட கீழான குணங்களை தான் கொண்டிருக்கிறோம் அப்படின்னு நெனக்க வெக்கிற அளவுக்கு இருந்ததால இங்க பதிவேற்றம் செய்றேன். 

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் !

படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!

- நன்றி: I LOVE TAMILNADU COMMUNITY IN FACE BOOK

Thursday, June 6, 2013

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல (18+)

மக்களே,

இது எனது FACEBOOK பக்கத்துல வந்த ஒரு தொலைப்பேசி பேச்சோட வீடியோ பதிவு. இதை பதிவு செய்தவரோட தகவல்கள் மற்றும் இந்த பதிவினுடைய உண்மைத்தன்மை பற்றி என்கிட்ட எந்த விதமான தகவல்களும் இல்லை. தெரியல. இதில் உள்ள மேலதிக தகவல்கள் எல்லாமே யூ டியூபில் காண கிடைத்து எடுக்கப்பட்டதே.  இதில் பேசும் நபர் மிக ஆபாசமாக பேசுகிறார். எனவே இந்த பேச்சை கேட்க விரும்பாதவர்கள், வீடியோவை தவிர்க்கவும்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் நாஜிபாளையம் ஊராட்சி செங்கோட்டையன் நகரில் வசிப்பவர் க.ஆனந்தராஜ்; 17-05-2013 அன்று நாஜிபாளையம் துவக்கப்பள்ளி அருகே உள்ள விஜயன் டீ கடையில் கோவில் வரி சம்பந்தமாக ஊர் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பெரியாரியல்வாதியான ஆனந்தராஜிடமும் வரி கேட்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு பெரியாரியல் வாதி எனக்கு கோவில் விழாக்களில் உடன்பாடில்லை, எனவே நான் வரி தரமாட்டேன். என் அண்ணன், தம்பியிடம் வாங்கிகொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே வரி கொடுத்தாக வேண்டும் என்று பஞ்சாயத்தார் வற்புறுத்தியுள்ளனர். 

இதை மறுத்த ஆனந்தராஜ், அந்த டீ கடையில் இருந்த தண்ணீர் குடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக டம்ளரை எடுத்துள்ளார். குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தண்ணீர் குடிப்பதா என்று அங்கிருந்த வீரப்பன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஆனந்தராஜை கடுமையாக திட்டி, குடத்தில் இருந்த தண்ணீரையும் கீழே ஊற்றியுள்ளனர். நான் எல்லோருக்கும் பொதுவான குடம் என்று நினைத்துவிட்டேன் என்று கூறிவிட்டு ஆனந்தராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். 

அடுத்த நாள் ஊராட்சி மன்ற தலைவர் இராஜா துரைசிங்கம், ஆனந்தராஜின் அம்மாவிடம் இதுபற்றி கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார். உன் பையனுக்கு இவ்வளவு தைரியமா? குடியானவர்களுக்கு சமமாயிட்டானா உன் பையன்? நான் மட்டும் அங்கிருந்திருந்தால் உன் பையனை உதைக்காமல் விட்டிருக்கமாட்டேன். மரியாதையா வரியை கட்டிவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்லு என்றும் எச்சரித்துள்ளார். இதை கேள்விபட்ட ஆனந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவரிடம் நீங்களும் இப்படி சொல்லலாமா? என்று முறையிட்டிருக்கிறார். அந்த தொலைபேசி உரையாடலை நீங்களே கேளுங்கள்.

எனக்கு எதுவும் சொல்ல தெரியல.